Saturday, November 12, 2005

குழம்பு வகைகள்

கீழே உள்ள குழம்பு வகைகளை குழம்பாமல் செய்து அடிங்க!

சைவ வகை:

1.
தேங்காய் பால் குழம்பு
2.
வத்தக் குழம்பு
3.
உருண்டைக் குழம்பு
4.
புளிக் குழம்பு
5.
பூண்டு, வெங்காயக் குழம்பு
6.
ஆந்திரா பருப்புக் குழம்பு
7. மிளகு குழம்பு
8. தக்காளி குழம்பு
9. தேங்காய் தக்காளி குழம்பு
10. மோர் குழம்பு
11. ஆந்திரா மோர் குழம்பு
12. அவசர மோர் குழம்பு

13. சட்னி மோர் குழம்பு
14. மொச்சை குழம்பு
15. அவரை குழம்பு
16. தேங்காய் குழம்பு

அசைவ வகை:

1. கறிக் குழம்பு
2. கோழிக் குழம்பு
3. மீன் குழம்பு
4. முட்டைக் குழம்பு
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, June 01, 2005

சட்னி வகைகள் தொடர்ச்சி

போன பதிவிலிட்ட சட்னிவகைகள் உங்களுக்கு பிடித்திருக்கும் என நினைக்கிறேன். இதோ இன்னும் பல சுவை சட்னிகள்.

தேங்காய் சட்னி (எல்லோருக்கும் தெரிந்தது தான்!., தெரியாதவர்களுக்காக)

தேவையானவை:
தேங்காய் - 1/4 மூடி (கத்தியில் சிறிது, சிறிதாக நறுக்கிக் கொள்ளுங்கள்)பொட்டுக்கடலை (உடைத்த கடலை) - 20 கிராம்
பச்சை மிளகாய் - 4
உப்பு - தேவைக்கேற்ப
கடுகு, உளுந்து - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
எண்ணை - சிறிது

செய்முறை: தேங்காய், பொட்டுக்கடலை (உடைத்த கடலை), பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை அரைத்தெடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணை ஊற்றி, கடுகு, உளுந்து, கறிவேப்பிலையிட்டுத் தாளித்துப் பரிமாறவும்.

மாற்று சுவை: பூண்டு சேர்த்தும் தேங்காய் சட்னி செய்யலாம்.
சிறிது இஞ்சி சேர்த்தும் தேங்காய் சட்னி செய்யலாம்.
(இரண்டையும் ஒன்றாக சேர்க்கக்கூடாது).

கொத்தமல்லி தேங்காய் சட்னி:

தேவையானவை:
கொத்தமல்லி - 1 கட்டு
தேங்காய் - 1/4 மூடி
பச்சை மிளகாய் - 4
நெய் - 1 தேக்கரண்டி
நல்லெண்ணை - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
கொத்துமல்லி இலையை நன்கு சுத்தம் செய்து இதனுடன் தேங்காய், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். வாணலியில் நெய், எண்ணை ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து அரைத்த சட்னி சேர்த்துக் கலக்கி, ஆறியவுடன் பரிமாறவும்.

இட்லி, தோசைக்கு கலக்கலாக இருக்கும் இந்தச் சட்னி.
கொத்தமல்லிச் சட்னி:

தேவையானவை:
கொத்தமல்லி இலை - 2 கட்டு
கடுகு - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - சிறிது
புளி - பாக்களவு
மஞ்சள் தூள் - சிறிது
பச்சை மிள்காய் - 2
வற்றல் மிள்காய் - 2
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணை - 1/2 தேக்கரண்டி

செய்முறை:
வாணலியில் எண்ணை ஊற்றி கடுகு, வெந்தயம் போட்டுத் தாளித்து எடுத்து இதனுடன் மல்லித்தழை, புளி, மிளகாய்கள், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கெட்டியாக அரைத்துப் பரிமாறவும்.
புதினாச் சட்னி

தேவையானவை:
புதினா - 2 கட்டு
நல்லெண்ணை - 1 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
பச்சை மிள்காய் - 2
வற்றல் மிளகாய் - 3
புளி - பாக்களவு
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
புதினாவை ஆய்ந்து சுத்தம் செய்து கொள்ளவும்., வாணலியில், புதினா இலைகளைப் போட்டு வதக்கவும். வதங்கியபின் தனியே வைக்கவும். வாணலியில் எண்ணை ஊற்றி, உளுந்தம் பருப்பு, வெந்தயம் தாளித்து புதினா இலைகளுடன் சேர்த்து, இதனுடன் மிளகாய்கள், புளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து அரைத்துப் பரிமாறவும்.

வித்தியாசமான சுவையுடனும், செறிமானத்திற்கு மருந்தாகவும் இருக்கும் இந்தச் சட்னி.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, May 29, 2005

சட்னி வகைகள்

ஆடல் கலை, பாடல் கலை, எழுத்துக் கலை, பேச்சுக் கலை இப்படி பல கலைகள் இருப்பினும் என்னைப் பொருத்தவரை சமையல் கலை என்பதையே எல்லாவற்றிலும் மேலானதென்பேன். வயிற்றுக்குச் சோறிடும் கலை. முக்கியமான ஒன்று., இது ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவான ஒரு கலை. புராணகால நளனிலிருந்து...இன்றைய அறுசுவை அரசர் நடராஜர் வரை ஆண்கள் சமையலில் நிபுணத்துவம் பெற்று இருக்கிறார்கள். இதை எப்போது, எப்படி பெண்களிடம் தள்ளிவிட்டார்கள் என்பதை ஆய்வு செய்து, அப்புறம் அப்படிப்போடுவோம். இப்போது சில சட்னி வகைகளைப் பார்ப்போம். நான் கொடுக்கும் ஒவ்வெரு உணவிற்கும் தேவையான பொருட்களுடன்., உங்கள் அன்பையும் சேர்த்துக்கொள்ளவும். அன்புடன் தயரித்து, அன்புடன் பரிமாறப்படுகின்ற பழையசோற்றிற்கு, அன்பில்லாமல் பரிமாறப்படும் பிரியாணியை விட சுவை அதிகம். சட்னிக்கு இம்பூட்டு அறிவுரையா? . அப்பிடிங்கிறிங்க! ..சரி ...எடுத்துக்கங்க கரண்டியை....

தக்காளி சட்னி - 1

தேவையானவை :
தக்காளி - 2 (சிறியதாக இருந்தால் 3)
பெரிய வெங்காயம் - 1 (சிறியதாக இருந்தால் 2)
வற்றல் மிளகாய் - 3
கொத்துமல்லி இலை - கைப்பிடியளவு
கடுகு, உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி.
எண்ணை - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை : 1. வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணை ஊற்றி கடுகு உளுந்தம் பருப்பு தாளித்து, வற்றல் மிளாகய் சேர்க்கவும்.
2. வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
3. வெங்காயம் வதங்கியவுடன், தக்காளி, கொத்துமல்லி இலை, உப்பு சேர்த்து நன்கு வதக்கி, ஆறியவுடன் அரைத்துப் பரிமாறவும்.

இட்லி, தேசை, சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள மிகவும் சுவையாக இருக்கும் இந்த தக்காளி சட்னி.

தக்காளி சட்னி - 2

தேவையானவை :
தக்காளி - 2 (சிறியதாக இருந்தால் 3)
பெரிய வெங்காயம் - 1 (சிறியதாக இருந்தால் 2)
வற்றல் மிளகாய் - 3
பூண்டு - 2 பல்
கடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
.கறிவேப்பிலை - சிறிது
எண்ணை - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை :1. வெங்காயம், தக்காளி, வற்றல் மிளகாய், பூண்டு, உப்பு அனைத்தையும் ஒன்றாக அரைத்தெடுக்கவும்.
2. வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணை ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, அரைத்த விழுது சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். ஆறியபின் உபயோகிக்கவும்.

இந்த தக்காளி சட்னியும் இட்லி, தேசை, சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள மிகவும் சுவையாக இருக்கும். செய்வதும் மிகவும் சுலபம். பூண்டு சேர்க்காமலும் செய்யலாம்.

வேர்க்கடலைச் சட்னி - 1

தேவையானவை :
வேர்க்கடலை - 100 கிராம் (வறுத்து தோல் நீக்கிக் கொள்ளவும்)
வற்றல் மிளகாய் - 3
புளி - சிறிது (பாக்களவு)
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை :வேர்க்கடலை, வற்றல் மிளகாய், புளி, உப்பு அனைத்தையும் ஒன்றாக அரைத்தெடுத்து உபயோகிக்கவும்.

தயிர் சாதம், புளி சாதம் போன்ற அனைத்து வகை சாதங்களுக்கும் சுவை கூட்டக்கூடிய சட்னி இது.

வேர்க்கடலைச் சட்னி -2

தேவையானவை :
வேர்க்கடலை - 100 கிராம் (வறுத்து தோல் நீக்கிக் கொள்ளவும்)
வற்றல் மிளகாய் - 3
பூண்டு - 4 பல்
பச்சை மிளகாய் - 3
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
புளி - சிறிது (பாக்களவு)
உப்பு - தேவைக்கேற்ப
நல்லெண்ணை - 1/2 தேக்கரண்டி

செய்முறை :1. வாணலியில் எண்ணை ஊற்றிக் காய்ந்ததும் புளி, பூண்டு, பச்சை,வற்றல் மிளகாய்கள் ஆகியவற்றைப் போட்டு வதக்கவும்.
2. இத்துடன் வேர்க்கடலை, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக அரைத்தெடுத்து உபயோகிக்கவும்.

தயிர் சாதம், புளி சாதம் போன்ற அனைத்து வகை சாதங்களுக்கும் ஏற்ற இந்தச் சட்னி, முன்று நாட்கள் வரை கெடாது.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, May 24, 2005

வாங்க சமைக்கலாம்!

அறுசுவை மற்றும் சுவையான வீட்டு, அழகு குறிப்புகள் கொடுக்கலாமென்று இருக்கிறேன். வற்வேற்பீர்கள் என்ற நம்பிக்கையில். மணமாகமல் தானே சமைக்கும் தம்பிகளுக்கு பயனுள்ளதாகவும், எளிய தாயரிப்பு முறைகள் கொண்டும் நிறைய உணவு வகைகள் கைவசம் உள்ளது. மணமாகியும் சமைக்கும் போறு பெற்றோர்கென, சுவையானதும், கடினமான தயாரிப்பு முறைகள் கொண்டும் ஏராளமான உணவுகள் உள்ளது. தோழியர் சமைத்துப் பார்க்க வெவ்வேறு பகுதி உணவு முறைகளையும், நான் சமைத்துப் பார்த்து அனுபவித்த அத்தனையும் மொத்தமாக உங்களுக்குத் தருகிறேன்.
இந்தச் சமையலினால் நான் பட்டபாடு கொஞ்சநஞ்சமன்று. சமைக்கத் தெரியாமல் வெறும் தயிரிலும், பருப்பிலும் வாழ்க்கை கழிந்த நாட்கள் பல. நான் மட்டும் இருந்திருந்தால் அப்படியே ஓட்டியிருப்பேனோ என்னவோ. என்னை நம்பியிருந்த ஒரு ஜீவனைப் பார்க்க பரிதாபமாக இருந்ததால், கற்றுக் கொண்டேன். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது